Friday, April 22, 2016

கீதை - 15.5 - நாசமற்ற பதம்

கீதை - 15.5 - நாசமற்ற பதம்



निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः ।
द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैर्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ॥१५- ५॥

நிர்மாநமோஹா ஜிதஸங்க³தோ³ஷா அத்யாத்ம நித்யா விநிவ்ருத்தகாமா: |
த்வந்த்வைர்விமுக்தா: ஸுக²து³:க²ஸம்ஜ்ஞைர்க³ச்ச²ந்த்ய மூடா: பத³மவ்யயம் தத் || 15- 5||


நிர்மாநமோஹா  = அகந்தையும், மயக்கமும் இன்றி

ஜித ஸங்க தோ³ஷா = பற்று என்ற தீய குணத்தை வென்று (ஜித = வென்று; சங்க = பற்று; தோஷ = குற்றம், தீமை)

அத்யாத்ம நித்யா = எப்போதும் ஆத்ம ஞானத்தில் லயித்து

விநிவ்ருத்த காமா: = ஆசைகளை விட்டு விலகி

த்வந்த்வைர்விமுக்தா: = இருமைகைளில் இருந்து விடுபட்டு

 ஸுக து:க = சுகம் துக்கம்

ஸம்ஜ்ஞைர் = என்று சொல்லப் பட்ட

க³ச்ச²ந்த் = செல்கிறார்கள்

அ மூடா:  = மூடத் தன்மை அற்றவர்கள்

பதம் = அடி எடுத்து வைக்கிறார்கள்

அவ்யயம் = தீமை அற்ற, நாசம் அற்ற

தத் = அது

அகந்தையும், மயக்கமும் இன்றி;
பற்று என்ற தீய குணத்தை விடுத்து;
ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிலைத்து;
ஆசைகளில் இருது நீங்கி ,
சுக துக்கம் என்ற இரட்டைகளில் இருந்து விடுபட்டு
மடமையற்றோர்,  அந்த நாசமற்ற நிலையை அடைகின்றனர்

 என்ன ஒரு அற்புதமான சுலோகம். மேலோட்டமாகப் பார்த்தால் புரியாது. ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க அதன் அருமை, இனிமை புரியும்.

இது போல எத்தனை அற்புதமான ஸ்லோகங்களை கீதை நமக்குத் தருகிறது.

கீதை என்பது ஒரு வழிபாட்டு நூல் அல்ல. அது ஒரு வாழ்கை நூல். நம் வாழ்க்கையை செப்பனிட உதவும் ஒரு நூல்.

 சம்சாரம் என்ற மரத்தை வீழ்த்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று முந்தைய ஸ்லோகத்தில் கூறினார் அல்லவா ?

எல்லா பற்றியும் விட்டு விட்டு என்ன வாழ்க்கை என்று சலிப்பவர்கள் உண்டு .

அப்படி பற்றில்லாமல் வாழ்ந்தால் என்ன கிடைக்கும் என்று கேள்விக்கு விடை தர வேண்டும் அல்லவா ? சும்மா பற்றில்லாமல் இரு, பற்றற்ற வாளால் சம்சாரம் என்ற மரத்தை வெட்டு என்று சொல்லுவது எளிது. செய்தால் என்ன  நடக்கும் என்று சொல்ல வேண்டும் அல்லவா ?

இன்னும் சில பேர், இதெல்லாம் எங்களுக்கு முன்னாலேயே தெரியும். வியாசர் இதைத்தான் சொல்லுவார். ஆனால், இதெல்லாம் நடை முறையில் சாத்தியம் இல்லை என்று தள்ளி விடுபவர்களும் இருக்கிறார்கள்.

கீதை பற்றற்று இரு என்று ஏதோ சாமியார் வாழ்க்கைக்கு வழி சொல்லவில்லை. நீங்கள் மிக மிக சந்தோஷமாக, எப்போதும் இன்பமாக வாழ வழி சொல்கிறது.

வாழ்க்கையில் துன்பம் ஏன் வருகிறது ?

இரண்டு வழிகளில் துன்பம் வருகிறது.

முதலாவது, நம்மை பற்றிய தவறான எண்ணம். இரண்டாவது, இந்த உலகைப் பற்றிய தவறான எண்ணம்.

தன்னைப் பற்றிய தவாறன எண்ணத்திற்குப் பெயர் அகந்தை, மமதை, செருக்கு.

எப்படி அது துன்பத்திற்கு வழி வகுக்கும் ?

யாராவது என்னை "நீ பெரிய அறிவாளி" என்று சொல்லிவிட்டால், அந்த அறிவாளி என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள  நான் படாத பாடு படுகிறேன். விழுந்து விழுந்து படிக்கிறேன். பல பட்டங்களை பெறுகிறேன். மேலும் மேலும்  படிக்கிறேன். கிடைக்கின்ற சந்தர்பத்தில் எல்லாம் என் மேதாவிலாசத்தை நிரூபிக்க முயல்கிறேன். என்னை யாராவது அறிவாளி இல்லை என்று சொன்னால் அவர்கள் மேல் கோபம் கொள்கிறேன். அவர்கள்  எண்ணம் தவறு என்று நிரூபிக்க முயல்கிறேன். நான் அறிவாளியா இல்லையா என்பதல்ல கேள்வி.  என்னைப்பற்றிய   ஒரு எண்ணத்தை நான் நிரூபிக்க முயல்கிறேன். அதற்காக வாழ் நாள் எல்லாம்  முயற்சி செய்கிறேன்.  அதற்காக மற்றவற்றை தியாகம் செய்கிறேன்.

முடிவில் , அடடா வாழ்க்கையில் என்னென்னவோ இருந்திருக்கிறது.  நான் ஏதோ ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு  வாழ்கை பூராவும் இதிலேயே செலவழித்து விட்டேனே என்ற ஏக்கம் மட்டுமே மிஞ்சும்.

இது அறிவாளி என்ற பட்டத்துக்கு மட்டும் அல்ல.

சிறந்த பக்திமான், ஆசாரமானவன், ஆத்திகன், நாத்திகன், தலைவன், தொண்டன், தியாகி, சாது, தீவிரவாதி  என்று எத்தனை பட்டங்கள் உண்டோ  அத்தனை பட்டத்துக்கும் ஒரு ஆள் இருக்கிறான். அதற்காகவே உயிரை விட. இது தன்னைப் பற்றிய  தவறான எண்ணங்களினால் வரும் துன்பம்.

அகந்தையினால் வரும் துன்பம் இது. பட்டங்களின் மேல் உள்ள பற்றுதலால் வரும் துன்பம்.

இன்னொரு பக்கம் உலகைப் பற்றிய தவறான எண்ணம்.

ஆங்கிலத்தில் Delusion என்று சொல்லுவார்கள்.

உலகம் நிரந்தரமானது, மற்றவர்கள் நல்லவர்கள், அல்லது கெட்டவர்கள், நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தல் கெட்டது நடக்கும் , நல்லது செய்தால் சொர்க்கம் போகலாம், கெட்டது செய்தால் நரகம் கிடைக்கும் என்று வெளி உலகைப் பற்றி ஆயிரம் அபிப்ராயம் உண்டு நம்மிடம்.  நமக்கு உள்ள அபிப்ராயம் எல்லாம் சரியானது என்றே நாம் உறுதியாக நினைக்கிறோம்.  அதில் சந்தேகம் இல்லை. அது தான் மயக்கம் அல்லது  delusion எனப்படுவது. இந்த தவறான எண்ணத்தினால் என்ன நிகழ்கிறது என்றால், வெளி உலகம் நாம் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் நமக்கு கோபமும் வருத்தமும் வருகிறது.

"நான் அவனுக்கு எவ்வளவு நல்லது செய்து இருக்கிறேன்...எனக்கு தேவை என்ற போது அவன் எனக்கு உதவி செய்ய வில்லையே "

"எப்படி அவளை/அவனை காதலித்தேன்...கடைசியில் கை விட்டுவிட்டாளே /விட்டுவிட்டானே"

"நான் எவ்வளவு பூஜை செய்தேன்....இந்த சாமிக்கு நன்றியே இல்லை "

என்று வருந்துகிறோம்.  கோபம் வருகிறது. எரிச்சல் வருகிறது. தன்னிரக்கம் மேலிடுகிறது.

தன்னைப் பற்றிய தவறான எண்ணம்.

வெளி உலகைப் பற்றிய தவறான எண்ணம்.

இந்த இரண்டையும் , பற்றற்ற வாளால் சம்சாரம் என்று மரத்தை வெட்டியவர்கள், விட்டு விடுவார்கள்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

இது இரண்டும் இல்லாவிட்டால் வாழ்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று.

முதல் ஒரு வரியில், முதல் பாதிக்கு இவ்வளவு அர்த்தம்.

மேலும் வரும்.

நல்லா இருக்கு தானே ?

(மேலும் படிக்க http://bhagavatgita.blogspot.in/2016/04/155.html )

No comments:

Post a Comment