Sunday, September 25, 2016

கீதை - 16.6 - இரண்டு வகையான மனிதர்கள்

கீதை - 16.6 - இரண்டு வகையான மனிதர்கள் 



द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन्दैव आसुर एव च ।
दैवो विस्तरशः प्रोक्त आसुरं पार्थ मे शृणु ॥१६- ६॥

த்வௌ பூதஸர்கௌ லோகேஸ்மிந்தைவ ஆஸுர ஏவ ச | 
தைவோ விஸ்தரஸ: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஸ்ரு ணு || 16- 6||

த்வௌ = இரண்டு 

பூத ஸர்கௌ = உயிர் கூட்டங்களில்  

லோகே =இந்த உலகில் 

அஸ்மிந் = இந்த 

தைவ = தெய்வீக 

ஆஸுர = அசுர 

ஏவ = நிச்சயமாக 

ச = மேலும் 

தைவோ = தெய்வீக 

விஸ்தரஸ: = விரிவாக 

ப்ரோக்த = சொன்னேன் 

ஆஸுரம் = அசுரர்களை 

பார்த = பார்த்தனே 

மே = என்னிடம் இருந்து 

ஸ்ருணு = கேட்பாயாக 

ஆஸுரம் மே ஸ்²ருணு = அசுர இயல் பற்றி என்னிடம் கேள்


இந்த உலகத்தில் உயிரினங்கள் இரண்டு வகைப்படும். அவை, தேவ மற்றும் அசுர குணங்களை கொண்டவை. இதுவரை தேவ குணங்களை பற்றி கூறினேன். இனி , அசுர குணங்களை பற்றி கூறுகிறேன், கேட்பாயாக பார்த்தா. 


நல்லதை மட்டும் சொல்லிக் கொடுத்தால், தீமை வரும் போது அது தீமை என்று தெரியாமல் நாம் அதில் மாட்டிக் கொள்ள நேரும்.

அதில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், அது என்ன என்று நமக்குத் தெரிய வேண்டும்.

அது மட்டும் அல்ல, நமது குணங்களே சில சமயம் தடுமாறலாம். மாறும்  குணங்கள் நல்லதா கெட்டதா என்று அறிந்து கொள்ள நாம்  தீய  குணங்களையும் அறிந்திருக்க வேண்டும்.  தீய குணங்கள் என்றால்  அசுரர் குணங்கள்.

அசுர குணங்கள் எவை, அவை எப்படி இருக்கும் என்று நீண்ட பட்டியலைத் தருகிறது கீதை.

நம்மிடம் உள்ள சில குணங்கள் தேவ குணங்களா அல்லது அசுர குணங்களா என்று கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.

மேலும், நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இந்த குணங்கள் இருக்கலாம். அவற்றை கண்டு, அவர்களுக்கு எடுத்துச் சொல்லி  அவர்களை நல்ல வழியில் செலுத்த முயலலாம் அல்லது முடிந்த வரை அவர்களை விட்டு விலகி இருக்கலாம்.


எனவே, அவை என்ன என்று கீதை எடுத்துச் சொல்கிறது.

அறிந்து கொள்வோமா ?

http://bhagavatgita.blogspot.in/2016/09/166.html

No comments:

Post a Comment