Friday, March 16, 2018

கீதை - 1.10 - ஒப்பிடுவதால் வரும் துன்பம்

கீதை - 1.10 - ஒப்பிடுவதால் வரும் துன்பம் 



अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम्।
पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम्॥१०॥

அபர்யாப்தம் தத³ஸ்மாகம் ப³லம் பீ⁴ஷ்மாபி⁴ரக்ஷிதம்|
பர்யாப்தம் த்வித³மேதேஷாம் ப³லம் பீ⁴மாபி⁴ரக்ஷிதம்||10||

அபர்யாப்தம் = பெரிய, அளவில்லாத

தத = அது, அந்த

அஸ்மாகம்  = நமது

ப³லம் = பலம்

பீ⁴ஷ்மாபி⁴ரக்ஷிதம் = பீஷ்மரால் ரட்சிக்கப்பட்ட , காவல் செய்யப்பட்ட

பர்யாப்தம் = குறைந்த

து = ஆனால்

இதம் = இந்த

எதேஷம் = அவர்களின்

பலம் = பலம்

பீ⁴மாபி⁴ரக்ஷிதம் = பீமனால் ரக்ஷிக்கப்பட்ட ||10||



பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட நமது படை அளவற்றிருக்கிறது. பீமனால் பாதுகாக்கப்பட்ட அவர்களின் படையோ நம்மை விட குறைந்தது. 

இந்த சுலோகத்துக்கு இரண்டு அர்த்தம் சொல்லலாம்.

பாடலில் உள்ள சொற்களை அங்கும் இங்கும் மாற்றிப் போட்டால், பீஷ்மரால்  பாதுகாக்கப்பட்ட  நமது படையை விட பீமனால் பாதுகாக்கப்பட்ட அவர்கள் படை  சிறந்து விளங்குகிறது என்று பொருள் வரும்.

ஸ்லோகத்தை எப்படி பதம் பிரிக்கிறோம் என்பதைப் பொறுத்து அர்த்தம் அமையும்.

எப்படி இருந்தாலும், துரியோதனின் சிக்கல் என்ன என்றால், தன்னை மற்றவர்களோடு  ஒப்பிட்டுக் கொண்டே இருப்பது.

அவன் பெரியவனா, நான் பெரியவனா?

அவன் சிறந்தவனா ? நான் சிறந்தவனா ?

என்ற போட்டி குணம் அவனிடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

தான் மற்றவர்களை விட எப்போதும் சிறந்து விளங்க வேண்டும் என்பது அவன்  குறிக்கோள். தான் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ இல்லையோ, மற்றவர்கள் தன்னை விட  மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்பது அவன் எண்ணம்.

அப்படி இருந்த துரியோதனன் இறுதி வரை மகிழ்ச்சியாக இல்லை.

அவன் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம்.

மற்றவர்களோடு நாம் நம்மை ஒப்பீடு செய்தால், ஒரு காலும் இன்பம் இருக்காது.

நாம் இங்கே யாருடனும் போட்டி போட வரவில்லை.

வாழக்கை பந்தய மைதானமோ, குஸ்தி களமோ அல்ல.

எந்நேரமும் யாரோடாவது போட்டி போட்டுக் கொண்டு, சண்டை போட்டுக் கொண்டு  வாழ்வை வீணடித்து விடக் கூடாது.

நம் வாழ்வை, நாம் சந்தோஷமாக வாழ்வோம்.

http://bhagavatgita.blogspot.in/2018/03/110.html


No comments:

Post a Comment